

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வதற்கு அனுமதிக்கலாமா? என்பது குறித்து பதிலளிக்குமாறு சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெளிநாடு செல்வதற்கு அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்திருந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, கார்த்தி சிதம்பரத்தை நிபந்தனையுடன் 4 அல்லது 5 நாள்கள் வெளிநாடு செல்வதற்கு அனுமதிக்கலாமா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதுதொடர்பாக, வரும் வியாழக்கிழமை (நவ. 16) பதிலளிக்க வேண்டும் என்று சிபிஐ சார்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் துஷார் மேத்தாவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முன்னதாக, கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக, இதுவரை நடைபெற்ற விசாரணைகளின்போது கிடைக்கப்பெற்ற ஆவணங்கûளை மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து நீதிபதிகளிடம் சிபிஐ தரப்பு தாக்கல் செய்தது. அந்த ஆவணங்களை நீதிபதிகள் படித்தனர்.
கடந்த 2007-ஆம் ஆண்டு, ப.சிதம்பரம், நிதியமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்காக, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்திடம் அனுமதி பெற்றதில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
அதற்கு உடந்தையாக செயல்பட்டதாக, கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ கடந்த மே மாதம் வழக்குப் பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து, சிபிஐ பல முறை அழைப்பாணை அனுப்பியும், அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை. இதனிடையே, அவரை கண்காணிக்கப்படும் நபராக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. அவர் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.