அயோத்தியில் ராமர் கோயிலுக்கு பெரும்பான்மையான முஸ்லிம்கள் ஆதரவு

'அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்குப் பெரும்பான்மையான முஸ்லிம்களின் ஆதரவு உள்ளதாக 'வாழும் கலை' அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வியாழக்கிழமை தெரிவித்தார்.
அயோத்தியில் ராமர் கோயிலுக்கு பெரும்பான்மையான முஸ்லிம்கள் ஆதரவு
Updated on
1 min read

'அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்குப் பெரும்பான்மையான முஸ்லிம்களின் ஆதரவு உள்ளதாக 'வாழும் கலை' அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வியாழக்கிழமை தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான பிரச்னையில் மத்தியஸ்தத்தில் ஈடுபட்டுள்ள ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வியாழக்கிழமை அந்த நகருக்கு வந்தார்.
அயோத்தி பிரச்னை தொடர்பான வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் அடுத்த மாதம் 5-ஆம் தேதி மீண்டும் தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக நீதிமன்றத்துக்கு வெளியிலேயே இந்தப் பிரச்னையில் சமரசத்தை ஏற்படுத்தும் வகையில் அவர் இரு தரப்பினரையும் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புகளுக்கிடையே அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தைப் பொருத்தவரை, தற்போது சுமுகமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்தப் பிரச்னையை விட்டு வெளியே வர அனைத்துத் தரப்பினரும் விரும்புகின்றனர்.
இந்த விவகாரத்துக்குத் தீர்வு காண்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும், அனைவரும் ஒருவருக்கொருவர் பேச்சுவார்த்தை நடத்தி முடிப்பதற்குள் அதுகுறித்து முடிவெடுத்துவிட முடியாது.
பெரும்பான்மை முஸ்லிம்கள் ஆதரவு: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நான் இவ்வாறு சொல்வதை சிலர் மறுத்தாலும், இதுவே உண்மையாகும்.
மேலோட்டமாகப் பார்க்கும்போது இந்த விவகாரத்துக்குத் தீர்வே இல்லாததுபோல தோன்றினாலும், இரு சமுதாயங்களையும் சேர்ந்த பொதுமக்கள், இளைஞர்கள், தலைவர்களால் நடக்க முடியாததையும் நடத்திக் காட்ட முடியும் என்றார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்.
அயோத்தி விவகாரத்தில் தொடர்புடையவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னதாக, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை லக்னெளவில் உள்ள அவரது இல்லத்தில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.
எதிர்ப்பு
அயோத்தி விவகாரத்தில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சமரசம் செய்து வைப்பதை ஏற்க முடியாது என முன்னாள் பாஜக எம்.பி.யும், ராம ஜென்மபூமி நியாஸ் அமைப்பின் மூத்த உறுப்பினருமான ராம் விலாஸ் வேதாந்தியும், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பும் தெரிவித்துள்ளன.
ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் வெளிநாடுகளிலிருந்து சொத்துகளைக் குவித்துள்ளதாகக் குற்றம் சாட்டிய வேதாந்தி, அவரைச் சந்திக்க மறுப்பு தெரிவித்தார்.
இதுதவிர, அயோத்தி வழக்கைத் தொடர்ந்த ஹஷீம் அன்சாரியின் மகன் இக்பால் அன்சாரி உள்ளிட்ட முஸ்லிம் சமுதாயத்தினரும், ரவிசங்கரின் சமரச முயற்சி குறித்து தங்களது சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். ராம ஜென்மபூமி நியாஸ் அமைப்பின் தலைவர் மஹந்த் நிருத்திய கோபால் தாஸ் கூறுகையில், 'அயோத்தி பிரச்னையில் எந்த சமரச முயற்சியையும் வரவேற்கிறோம். ஆனால், ராமர் பிறந்த இடத்தைத் தவிர வேறு எங்கும் கோயில் கட்டுவதை நாங்கள் ஒருபோதும் ஏற்கமாட்டோம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com