ஆதார் பெற தபால் நிலையங்களில் பதிவு: மகாராஷ்டிரம், கோவாவில் ஜனவரியில் அறிமுகம்

மகாராஷ்டிரம், கோவா ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல், தபால் நிலையம் மூலமாக ஆதார் எண் பெறுவதற்கு பொதுமக்கள் விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.
ஆதார் பெற தபால் நிலையங்களில் பதிவு: மகாராஷ்டிரம், கோவாவில் ஜனவரியில் அறிமுகம்
Updated on
1 min read

மகாராஷ்டிரம், கோவா ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல், தபால் நிலையம் மூலமாக ஆதார் எண் பெறுவதற்கு பொதுமக்கள் விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இதுகுறித்து மகாராஷ்டிரம், கோவா மாநில தலைமை தபால் நிலைய அலுவலர் ஹெச்.சி.அகர்வால், மும்பையில் வியாழக்கிழமை கூறியதாவது:
மகாராஷ்டிரம், கோவா ஆகிய மாநிலங்களில் இதுவரை ஆதார் எண் பெறாதவர்கள், இந்த மாநிலங்களில் உள்ள 1,293 தபால் நிலையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதுதவிர ஆதார் அட்டையில் பெயர், முகவரி உள்ளிட்ட திருத்தங்களையும் மேற்கொள்ளலாம்.
ஆதார் அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ளும் பணியை, கடந்த ஜூன் மாதமே தொடங்கினோம். அதன் பிறகு, ஆதார் எண் பதிவுக்குத் தேவையான புதிய இயந்திரங்களைக் கொள்முதல் செய்யத் தொடங்கினோம். அதைத் தொடர்ந்து, ஆதார் எண் பதிவு செய்யும் முறை குறித்து தபால் துறையைச் சேர்ந்த 4,000 ஊழியர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறோம்.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு தொடக்கம் முதல் மும்பை, ஒளரங்காபாத், நாகபுரி, புணே, கோவா ஆகிய மண்டலங்களைச் சேர்ந்த தபால் நிலையங்களில் ஆதார் எண் பெற விண்ணப்பிக்கலாம். அந்தத் தபால் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள், கூடுதலாக ஆதார் எண் பதிவுக்கான பணிகளையும் கவனிப்பார்கள்.
அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஆதார் எண் அவசியம் என்பதால், தபால் நிலையங்கள் மூலமாக, ஆதார் எண்ணுக்கு விண்ணப்பிக்கும் முறை பொதுமக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com