மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வருவதால், பிரிட்டன் பயணத்தை ரத்து செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜேட்லின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு சிறுநீரகக் கோளாறுகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். எனினும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. நோய்த்தொற்று ஏற்படும் என்பதால், அவரை பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
எனவே, கடந்த திங்கள்கிழமை முதல் நாடாளுமன்ற நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கவில்லை.
மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, பதவிப்பிரமாணம் கூட இன்னும் அவர் எடுத்துக் கொள்ளவில்லை.
ஜேட்லியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி முடிவடைந்து விட்ட நிலையில், உத்தரப் பிரதேசத்தில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதேபோல், 58 உறுப்பினர்கள் புதிதாகவும், மீண்டும் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில், ஜேட்லி உள்ளிட்ட மூவர் இன்னும் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ளவில்லை.
இந்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக, உள்ளூர் பொது நிகழ்ச்சிகளில் ஜேட்லி கலந்து கொள்ளவில்லை. இதேபோல், வெளிநாட்டுப் பயணங்களையும் அவர் ரத்து செய்துள்ளார்.
இந்தியா-பிரிட்டன் இடையேயான 10-ஆவது நிதி, பொருளாதார பேச்சுவார்த்தைக் கூட்டம், லண்டனில் அடுத்த வாரம் நடைபெறவிருந்தது. அதைத் தொடர்ந்து, லண்டனில் உள்ள 'சாத்தம் ஹெளஸ்' ஆய்வு மையத்தில், '2022-ஆம் ஆண்டை நோக்கி: இந்தியாவின் சர்வதேசப் பார்வை' என்ற தலைப்பில் அவர் உரையாற்ற இருந்தார். ஆனால், அந்தப் பயணத்தை ஜேட்லி ரத்து செய்துள்ளார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு, உடல் பருமன் பிரச்னைக்கு ஜேட்லி அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். அதன் பக்க விளைவாக, அவருக்கு சிறுநீரகக் கோளாறுகள் ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது, ஜேட்லிக்கு அவரது இல்லத்துக்குச் சென்று எய்ம்ஸ் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை தேவைப்படுகிறா என்பது குறித்து மருத்துவர்கள் இன்னும் முடிவு செய்யவில்லை.
மருத்துவர்களின் அறிவுரையைப் பொருத்து, அவர் தில்லி உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







