மூணார்: கேரள மாநிலம் மூணாறில் தொடர் மழை மற்றும் நிலச்சரிவின் காரணமாக சுற்றுலா விடுதியில் 60 பேர் சிக்கித் தவிக்கும் தகவல் தெரிய வந்துள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் புதன்கிழமை இரவு மற்றும் வியாழக்கிழமை பகல் முழுவதும் பலத்த மழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மலைப்பகுதிகளில் உள்ள நீரோடைகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் அதிக இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரள மாநிலம் மூணாறில் தொடர் மழை மற்றும் நிலச்சரிவின் காரணமாக சுற்றுலா விடுதியில் 60 பேர் சிக்கித்தவிக்கும் தகவல் தெரிய வந்துள்ளது.
இடுக்கி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலம் மூணாறு . இயற்கை எழில் கொஞ்சும் இடம் என்பதால் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். அவ்வாறு அங்குள்ள தங்கும் விடுதி ஒன்றில் 60 சுற்றுலா பயணிகள் தங்கி இருந்தனர்.
கடந்த இரு நாட்களாக பெய்து வரும் தொடர் மழை மற்றும் அதனால் உண்டான நிலச்சரிவின் காரணமாக, குறிப்பிட்ட விடுதிக்குச் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டு விட்டது. இதன் காரணமாக அவர்கள் யாரும் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்து வருவதாக தற்பொழுது தகவல் தெரிய வந்துள்ளது.