கடந்த முறையை விட குறைந்த வாக்கு சதவீதம்: மன்னிப்பு கோரிய தெலங்கானா தேர்தல் அதிகாரி

கடந்த முறையை விட வாக்கு சதவீதம் குறைந்ததை அடுத்து தெலங்கானா தேர்தல் அதிகாரி மன்னிப்பு கோரினார்.
கடந்த முறையை விட குறைந்த வாக்கு சதவீதம்: மன்னிப்பு கோரிய தெலங்கானா தேர்தல் அதிகாரி
Updated on
1 min read

கடந்த முறையை விட வாக்கு சதவீதம் குறைந்ததை அடுத்து தெலங்கானா தேர்தல் அதிகாரி மன்னிப்பு கோரினார்.

119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் 7-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 139 பெண் வேட்பாளர்கள் உட்பட 1,821 பேர் போட்டியிட்டனர். வருகிற 11-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 

கடந்த 2014-ஆம் ஆண்டு தெலங்கானா தனி மாநிலம் உருவாக்கப்பட்டு சந்தித்த முதல் தேர்தலின் போது வாக்குப்பதிவு 69.5 சதவீதமாக இருந்தது. ஆனால் தற்போது நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் அது 67 சதவீதமானது. இதுகுறித்து அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி கூறியதாவது,

பல்வேறு காரணங்களால் காலை 7 மணிக்கு துவங்க வேண்டிய வாக்குப்பதிவு பல இடங்களில் தாமதமாகத் தொடங்கியது. பெரும்பாலான மையங்களில் இருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை இயக்குவதில் சிக்கல் நிலவியது. மேலும் முன்னதாக நடைபெறும் மாதிரி வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் உள்ள 31 மாவட்டங்களில் 32,815 வாக்குப்பதிவு மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. 

அவற்றில் 4,292 புகார் வந்த நிலையில், 3,650 புகார்கள் உடனடியாக சரிசெய்யப்பட்டன. இருப்பினும் 642 வழக்குகள் பல்வேறு நிலையில் நிலுவையில் உள்ளன. இந்த தேர்தலின் போது ரூ. 117.20 கோடி ரொக்கம் உட்பட தங்கம், வெள்ளி, புகையிலைப் பொருட்கள், மது வகைகள் உட்பட ரூ.138 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பலரின் பெயர்கள் வாக்குச்சீட்டில் இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டுகள் அதிகளவில் இருந்தன. அதற்காக மன்னிப்பு கோருகிறேன். இப்பிரச்னை உடனடியாக தீர்க்கப்படும். இதுதொடர்பாக டிசம்பர் 26 முதல் பிப்ரவரி 2019 வரை வாக்காளர் முகாம்கள் நடத்தப்பட்டு அனைவரின் பெரும் இடம்பெறச் செய்யப்படும். எனவே அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அனைவருக்கும் வாக்களிக்கும் நிலை ஏற்படுத்தப்படும் என்றார்.

முன்னதாக, பிரபலங்கள் சிலரின் பெயர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் பெயர்கள் வாக்குச்சீட்டில் இடம்பெறாதது சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது. அவற்றில், அம்மாநில நிதியமைச்சர் ராஜேந்தர் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களும் இடம்பெறவில்லை. அதுபோன்று 2015-ஆம் ஆண்டு முதல் தன்னுடைய பெயர் வாக்குச்சீட்டில் இடம்பெறவில்லை என பிரபல பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா ட்வீட் செய்துள்ளார். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com