அஸ்ஸாம் மாநிலம் திப்ருகார் அருகே போகிபீல் என்ற இடத்தில் பிரம்மபுத்திரா நதிக்குக் குறுக்கேக் கட்டப்பட்ட இந்தியாவின் மிக நீளமான ரயில் மற்றும் வாகன மேம்பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
புது தில்லியில் இருந்து மதியம் திப்ருகார் வந்த மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் போகிபீல் சென்று பிரம்மபுத்திரா நதியின் தென்கரையில் அமைக்கப்பட்டுள்ள சுமார் 4.94 கி.மீ. நீளமுள்ள இரண்டு அடுக்கு மேம்பாலத்தை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில்,மோடியுடன் அஸ்ஸாம் ஆளுநர் ஜக்தீஷ் முகி, முதல்வர் சர்பானந்தா சோனோவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தலைவர்கள் அனைவரும் மேம்பாலத்தைத் திறந்து வைத்த பிறகு சில மீட்டர்கள் நடந்து சென்று பார்வையிட்டனர்.
இந்த மேம்பாலம் மூலமாக அருணாச்சலப்பிரதேசத்தின் பல மாவட்டங்களில் இருக்கும் தொடர்புகள் புத்துயிர் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த தினத்தையொட்டி இன்று இந்த மேம்பாலத்தில் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
அஸ்ஸாம் மாநிலத்தின் தின்சுகியா நகரில் இருந்து புறப்படும் ரயில், இந்த மேம்பாலம் வழியாக அருணாசலப் பிரதேசத்தில் உள்ள நஹர்லாகுன் நகரைச் சென்றடையும்.
இந்த ரயில் வாரத்தில் 5 நாள்கள் வரை இயக்கப்படும். இரு நகரங்களுக்கு இடையே செல்வதற்கு வழக்கமாக 15 முதல் 20 மணி நேரம் வரை ஆகும்.
இந்தப் பாலத்தின் வழியாக இந்த ரயில் இயக்கப்படுவதன் மூலம், ஐந்தரை மணி நேரத்தில் நஹர்லாகுன் நகரைச் சென்றடையலாம்.
புதிதாகத் தொடங்கப்படும் ரயில் சேவை, தின்சுகியா நகரில் இருந்து பிற்பகலில் புறப்பட்டுச் செல்லும். அடுத்த நாள் காலை நஹர்லாகுன் நகரிலிருந்து மீண்டும் தின்சுகியாவுக்கு புறப்படும்.
அஸ்ஸாம் மாநிலம், திப்ரூகர் மாவட்டத்தில் பாய்ந்தோடும் பிரம்மபுத்திரா நதியின் தெற்கு பகுதியிலிருந்து அருணாசலின் எல்லையில் உள்ள சிலாபதர் வரை பகிபீல் பாலம் இணைக்கிறது.
நஹர்லாகுன் நகரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அருணாசல் தலைநகர் இடாநகர் உள்ளது. கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றுக்கு மக்கள் சென்றடைய இந்த ரயில் சேவை உதவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






