கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் விவேகானந்தர் பிறந்தநாள் பேரணியில் பா.ஜனதா மற்றும் திரிணாமுல் தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் பாஜக அலுவலம் தாக்கப்பட்டது. பலர் காயமடைந்தனர்.
சுவாமி விவேகானந்தாவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கொல்கத்தாவில் பா.ஜனதா சார்பில் வரும் 18-ம் தேதி வரையில் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தப்படுகிறது. காண்டாயிலிருந்து கூச்பெகரை நோக்கி பாரதீய ஜனதா யுவ மோர்ச்சாவினர் தரப்பில் 8 நாள் பேரணியாக இந்த மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தப்படுகிறது இதனைக் குறிவைத்துதான் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அத்துடன் கொல்கத்தாவில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் கூறியதாவது
வெள்ளியன்று காலை 10.30 மணியளவில் பாரதீய ஜனதா யுவ மோர்ச்சா பேரணி நோக்கி கோஷம் எழுப்பியவாறு வந்த திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள், பா.ஜனதா அலுவலகம் மீதும், தொண்டர்கள் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அலுவலகம் முன் நின்ற கார்கள் மற்றும் கூடியிருந்த தொண்டர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கொடூரமாக நடத்திய தாக்குதலில் பலர் காயம் அடைந்து உள்ளனர். இந்த கொடூர தாக்குதலில் 10-க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் படுகாயம் அடைந்து உள்ளனர்.
மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு முற்றிலும் பாதிக்கப்பட்டு விட்டது. மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி கொண்டுவருவதன் மூலமே சட்டம் மற்றும் ஒழுங்கை சரிசெய்ய முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். அவரது இந்த குற்றச்சாட்டுக்கு திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் சாஷி பன்ஜா பதிலளித்துளார். அவர் கூறியதாவது:
மாநிலத்தில் நிலவும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கவே பாஜக வன்முறையைக் கையாளுகிறது. பாரதீய ஜனதா தொண்டர்கள்தான் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களை தாக்கி உள்ளனர். பா.ஜனதா மற்றும் அதுபோன்ற மதவாத அமைப்புகள் மாநிலத்தின் அமைதியை சீர்குலைக்க முயற்சி செய்வதை அனுமதிக்கவே மாட்டோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.