/

அமெரிக்கா செல்வதென்றால் எல்லாத் தகவல்களையும் கொடுப்பவர்கள் ஆதார் என்றால் மட்டும் புரட்சி செய்வதா?: மத்திய அமைச்சரின் சர்ச்சைப் பேச்சு! 

அமெரிக்கா செல்வதென்றால் எல்லாத் தகவல்களையும் கொடுப்பவர்கள் ஆதார் என்றால் மட்டும் புரட்சி செய்வதா என்ற மத்திய அமைச்சர் அல்போன்சின் பேச்சு மிகுந்த சர்ச்சையினை உருவாகியுள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:34 pm

DIN

கொச்சி: அமெரிக்கா செல்வதென்றால் எல்லாத் தகவல்களையும் கொடுப்பவர்கள் ஆதார் என்றால் மட்டும் புரட்சி செய்வதா என்ற மத்திய அமைச்சர் அல்போன்சின் பேச்சு மிகுந்த சர்ச்சையினை உருவாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி பெயரிலான அலைபேசி செயலி கடந்த 2015–ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. இதை 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். தற்பொழுது இந்த செயலியில் உள்ள பொதுமக்களின் சுய விவர தகவல்கள் திருடப்பட்டு உள்ளது தொடர்பாக பிரான்ஸ் சைபர் பாதுகாப்பு வல்லுனர் எலியட் ஆல்டர்சன் என்பவர் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் பிரதமர் மோடி இருவரையும் கடுமையாக சாடி இருந்தார். அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவொன்றில், 'வணக்கம்! என் பெயர் நரேந்திர மோடி. நான் இந்தியாவின் பிரதமர். எனது அதிகாரப்பூர்வ செயலில் நீங்கள் பதிவு செய்யும் உங்கள் விவரங்களை அமெரிக்காவில் உள்ள எனது தொழிலதிப நண்பர்களுக்கு விற்று விடுகிறேன் என்று கிண்டலாக பதிவிட்டிருந்தார்.

அதேசமயம் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மனிஷ் திவாரியும் மத்திய அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். இதனால் இணையத்தில் காங்கிரஸ் கட்சியினருக்கும் பா.ஜ.கவினருக்கும் இடையே வார்த்தை போர் நடந்து வருகிறது. இதற்கிடையில் இப்படி தகவல்கள் திருடப்படுவதை தடுப்பதற்கு அரசு இணையதளங்கள், செயலிகள் உடனடியாக தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும்; இதை அடிக்கடி மேற்கொள்ள வேண்டும் என்று சைபர் பாதுகாப்பு வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் அமெரிக்கா செல்வதென்றால் எல்லாத் தகவல்களையும் கொடுப்பவர்கள், அரசு ஆதார் வழியாக தகவல்களைக் கேட்டால் மட்டும் புரட்சி செய்வதா என்ற மத்திய சுற்றுலாத் துறை இணை அமைச்சர் அல்போன்சின் பேச்சு மிகுந்த சர்ச்சையினை உருவாகியுள்ளது.

கொச்சியில் ஞாயிறன்று நடந்த நிகழ்வொன்றில் மத்திய சுற்றுலாத் துறை இணை அமைச்சர் அல்போன்ஸ் கலந்து கொண்டார். அப்பொழுது அவர் பேசியதாவது:

ஆதார் மூலம் குடிமக்களின் தகவல்கள் கசிகிறது, அந்தரங்கம் பாதிக்கப்படுகிறது என்று குரல் எழுப்பிக் கொண்டே இருக்கிறாரகள்? இவ்வாறு குரல் எழுப்புபவர்கள் யார்?

உங்களுக்கெல்லாம் அமெரிக்கா செல்வதற்காக 10 பக்கங்களுக்கு விசா விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வதில் பிரச்னை இல்லை. அங்கு உங்கள் கைரேகைகளை வழங்குவதிலும், சோதனைக்காக நிர்வாணமாக நிற்பதில் தயக்கம் இல்லை. ஆனால் உங்களின் அரசு உங்களிடம் இருந்து பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்களை கேட்டால் உடனே அந்தரங்கத்தில் தலையிடுவதாக பெரும் புரட்சி நடக்கிறது.  

இவ்வாறு அவர் பேசியுள்ளார். மத்திய அமைச்சரின் இந்த பேச்சு மிகுந்த சர்ச்சையினை உண்டாக்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.