

இந்தியாவில் வாழும் மக்களில் ஏராளமானோர், தங்களுக்கு ஏற்படும் நோய்க்கான சிகிச்சைக்காக அதிகளவில் செலவிட்டு ஏழ்மை நிலையை அடைவதாக உலக சுகாதாரத் துறை - உலக வங்கி இணைந்து வெளியிட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
புற்றுநோய், சிறுநீரகப் பிரச்னைகள், இதய நோய் போன்ற நோய்களுக்கான சிகிச்சைகள்தான், லட்சக்கணக்கான இந்தியர்களை ஆண்டு தோறும் ஏழ்மை நிலைக்கு தள்ளி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல, நரம்பியல் பிரச்னைகள், வயிறு கோளாறுகள், தசைப் பிரச்னை, காயம், மஞ்சள் காமாலை, நீரிழிவு, தொற்று நோய்கள், ஆஸ்துமா, காசநோய் போன்றவற்றுக்காகவும் சிகிச்சை பெற ஏராளமான மக்கள் தங்கள் சொத்துக்களை அல்லது நிலங்களை விற்பது, பெரிய அளவில் கடன் வாங்குவது போன்றவற்றை செய்து ஏழ்மை நிலைக்கு தள்ளப்படுவதாகக் கூறுகிறது.
நோய்களின் பாதிப்பு இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மாறிக் கொண்டே இருக்கிறது. ஒரு முறை தொற்று நோய்களின் பாதிப்பு அதிகரிக்கும் நிலையில், அடுத்த முறை தொற்றா நோய்களான இதய நோய், புற்றுநோய், நீரிழிவு போன்றவை அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
நோய்கள் காரணமாக ஏற்படும் உயிரிழப்பு 2014ம் ஆண்டு மொத்த உயிரிழப்பில் 50 சதவீதமாக இருந்த நிலையில், 2014ம் ஆண்டில் இது 60 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஒரு பக்கம் மருத்துவத் துறை வளர்ந்து கொண்டே வந்தாலும், நோய்களின் தாக்கமும் அதற்கு இரண்டு மடங்கு வேகத்தில் வளர்ந்து வருகிறது என்பதையே இது காட்டுகிறது.
அதே போல, 2004ம் ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 29 சதவீதமாக இருந்த நிலையில், இது 2014ல் 38 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பொதுமக்களுக்கு புற்றுநோய் மற்றும் இதய நோய்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க மத்திய, மாநில அரசுகள் முன் வர வேண்டும் என்பதையே இந்த ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது.
இதய நோய் மற்றும் புற்றுநோய் மட்டுமல்ல, நரம்பியல் கோளாறுகள் மற்றும் மன ரீதியான நோய்களும் குடும்பங்களை ஏழ்மை நிலைக்குத் தள்ளும் காரணங்களில் முக்கிய இடத்தில் இருப்பதாக நிபுணர்கள் எடுத்துரைக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.