ஹிமாச்சல பிரதேசத்தின் நாஹன் பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளி வளாகத்தில் 18 பழந்தின்னி வௌவால்கள் புதன்கிழமை திடீரென உயிரிழந்தன. இச்சம்பவம் காரணமாக அப்பகுதி மக்களிடையே நிபா வைரஸ் பீதி அதிகரித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட துணைக் கமிஷனர் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை, கால்நடைத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வுகள் மேற்கொண்டனர். மேலும் நிபா வைரஸ் பீதி என்பது வதந்தி என்றும் குறிப்பிட்டனர்.
இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர்.சஞ்சய் ஷர்மா கூறுகையில்,
இங்கு ஒவ்வொரு ஆண்டும் வௌவால்கள் வருகை தரும் என பள்ளி முதல்வர் மற்றும் மாணவர்கள் தெரிவித்தனர். அதில் இம்முறை வழக்கத்தை விட அதிகளவிலான வௌவால்கள் வருகை தந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடத்தில் நிபா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம் என்றார்.
வௌவால்கள் இறப்பு குறித்து அந்தப் பள்ளியின் முதல்வர் சுபர்ணா பரத்வராஜ் தெரிவித்ததாவது:
இங்கு ஏற்பட்டுள்ள வௌவால்களின் இறப்பு இங்குள்ளவர்களின் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. அதுபோல நிபா வைரஸ் தாக்குதல் தொடர்பான அச்சத்தையும் மறுத்துவிட முடியாது. மாணவர்களிடத்தில் நிபா வைரஸ் குறித்து சரியான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் தற்காப்பு நடவடிக்கைகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. இதுகுறித்து அனைவரிடத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளன என்றார்.