இந்திய பாரம்பரிய உடையில் தென்கொரிய அதிபரின் மனைவி: பிரதமர் மோடி பாராட்டு
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில், தென்கொரிய அதிபரின் மனைவி கிம் ஜுங்-சூக், இந்திய பாரம்பரிய உடையான சேலை அணிந்து பங்கேற்றார்.


உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில், தென்கொரிய அதிபரின் மனைவி கிம் ஜுங்-சூக், இந்திய பாரம்பரிய உடையான சேலை அணிந்து பங்கேற்றார். இதற்காக, அவருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன்னின் மனைவி கிம் ஜுங்-சூக், 4 நாள் பயணமாக இந்தியாவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்தார். தில்லியில் கடந்த திங்கள்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசிய அவர், இரு நாடுகளுக்கும் இடையே மக்கள்ரீதியிலான தொடர்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டங்களில் கிம் ஜுங்-சூக் பங்கேற்றார். அதில் முக்கிய நிகழ்வான "தீபோற்சவம்' விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்ற அவர் இந்திய பாரம்பரிய உடையான சேலை அணிந்திருந்தார்.
முன்னதாக, அயோத்தியிலுள்ள ராணி ஹியூ-வின் நினைவிடத்தில் அவர் மரியாதை செலுத்தினார். ராணி ஹியூ, அயோத்தியில் இருந்து கொரியாவுக்குச் சென்று, அந்நாட்டு அரசரை மணம்புரிந்ததாக வரலாறு கூறுகிறது. அவரது நினைவிடத்தை அழகுபடுத்தும் திட்டம் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற கிம் ஜுங்-சூக், பின்னர் ராம் கத் பூங்காவில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது, ராமர், சீதை, லட்சுமணர் வேடமணிந்த கலைஞர்கள், அவரை வரவேற்று அழைத்துச் சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "இந்தியா-கொரியா இடையிலான தொடர்புகள் வரலாற்றுரீதியிலானவை. இரு நாட்டு மக்களும் வளமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். அயோத்தியில் தீபாவளி கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. என்னை இந்தியாவுக்கு அழைத்தமைக்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார். பின்னர், சரயு நதிக்கரையில் 3 லட்சம் தீபங்கள் ஏற்றும் "தீபோற்சவம்' நிகழ்விலும் அவர் பங்கேற்றார்.
இதனிடையே, தீபாவளி கொண்டாட்டத்தில் இந்திய பாரம்பரிய உடையான சேலை அணிந்து பங்கேற்றமைக்காக கிம் ஜுங்-கிற்கு, பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
இதுதொடர்பாக சுட்டுரையில் அவரது படங்களையும் இணைத்து, மோடி வெளியிட்ட பதிவில், "தென்கொரியாவின் முதல் குடிமகளான கிம் ஜுங்-சூக், அயோத்திக்கு வருகை தந்தது மகிழ்ச்சியளிக்கிறது. அவர் இந்திய பாரம்பரிய உடையான சேலை அணிந்ததை, ஒட்டுமொத்த இந்தியாவும் பாராட்டுகிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...