நவம்பர் 19-ஆம் தேதி கூடுகிறது ஆர்பிஐ மத்தியக் குழு

நவம்பர் 19-ஆம் தேதி கூடுகிறது ஆர்பிஐ மத்தியக் குழு

மத்திய ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தலைமையில் வரும் நவம்பர் 19-ஆம் தேதி மத்தியக் குழு கூடுகிறது. 
Published on

மத்திய ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தலைமையில் வரும் நவம்பர் 19-ஆம் தேதி மத்தியக் குழு கூடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) துணை கவர்னர் விரால் ஆச்சார்யா மத்திய வங்கிகளின் தன்னாட்சி நிர்வாகம் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து தெரிவித்தார். இதையடுத்து, மத்திய நிதியமைச்சகம் மற்றும் ஆர்பிஐ இடையே பிரச்னை உருவாக தொடங்கியது. 

இதைத்தொடர்ந்து, ஆர்பிஐ சட்டத்தின் பிரிவு 7-ஐ பயன்படுத்தி ஆர்பிஐ-உடன் நிதியமைச்சகம் ஆலோசனை நடத்த தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கிடையில், ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் ராஜிநாமா செய்யப்போவதாகவும் அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் வெளியாகின. இவை ஆர்பிஐ, நிதியமைச்சகம் இடையிலான பிரச்னையை வலுப்படுத்தியது. 

இந்நிலையில், ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் தலைமையில் ஆர்பிஐ மத்தியக் குழு வரும் நவம்பர் 19-ஆம் தேதி மும்பையில் கூடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்பிஐயின் இந்த மத்தியக் குழுவில் அரசால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் உட்பட 18 பேர் அடங்குவார்கள். 

இது ஆர்பிஐ-யின் வழக்கமான கூட்டம் என்றாலும், வழக்கத்துக்கு மாறாக சற்று முன்கூட்டியே நடைபெறவுள்ளது என்று ஆர்பிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முந்தைய கூட்டம் இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்றது. 

நிதியமைச்சகம் மற்றும் ஆர்பிஐ இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ள நிலையில் இந்தக் கூட்டம் கூடவுள்ளதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com