மும்பை: பிரதமர் பதவியில் இருந்து மோடியை அகற்றி விட்டு நிதின் கட்கரியை நியமியுங்கள் என்று விவசாய சங்கத் தலைவர் ஒருவர் ஆர்.எஸ்.எஸ் தலைமைக்கு எழுதியுள்ள கடிதம் அதிர்ச்சி அலைகளை கிளப்பியுள்ளது.
விவசாய மேம்பாட்டுக்காக மஹாராஷ்டிர மாநில அரசால் வி.என்.எஸ்.எஸ்.எம் என்னும் குழு நியமிக்கப்பட்டுள்ளது . இதன் தலைவருக்கு ஏறக்குறைய மாநில அமைச்சர் பதவிக்கு நிகரான அந்தஸ்து உள்ளது. தற்போது அதன் தலைவராக இருப்பவர் கிஷோர் திவாரி.
செவ்வாயன்று மும்பையில் தானே மற்றும் புணே ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மும்பை வருகிறார்.
இந்நிலையில் பிரதமர் பதவியில் இருந்து மோடியை அகற்றி விட்டு நிதின் கட்கரியை நியமியுங்கள் என்று கிஷோர் திவாரி ஆர்.எஸ்.எஸ் தலைமைக்கு எழுதியுள்ள கடிதம் அதிர்ச்சி அலைகளை கிளப்பியுள்ளது.
இதுதொடர்பாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் மற்றும் பொதுச் செயலாளர் பையாஜி சுரேஷ் ஜோஷி ஆகிய இருவருக்கும் எழுதியுள்ள கடிதத்தில் கிஷோர் திவாரி குறிப்பிட்டுள்ளதாவது:
தீவிரப்போக்கு மற்றும் சர்வாதிகார மனப்பான்மையை கடைப்பிடிக்கும் தலைவர்கள் கட்சியிலும் ஆட்சியிலும் இருப்பது என்பது நாட்டிற்கும் சமூகத்திற்கும் ஆபத்தானதாகும். இதற்கு முன்பும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது எனவே வரலாறு மீண்டும் திரும்ப நடக்க கூடாது என்றால், 2019-ஆம் ஆண்டு தேர்தலில் தலைமைப் பொறுப்பில் இருந்து மோடியை நீக்கி விட்டு, நிதின் கட்கரியை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் திவாரி தெரிவித்துள்ளார்.
முன்னதாக டிசம்பர் 11-ஆம் தேதியன்று ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியான அன்றும் கூட, 'பாஜகவின் தோல்விக்கு காரணமாக அமைந்தவர்களும், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான கொள்கைகளை கொண்டவர்களுமான மோடி மற்றும் அமித் ஷா இருவரும் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும்' என்று கிஷோர் திவாரி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.