மத்தியப்பிரதேச முதல்வர் கமல்நாத் தனிச்செயலர் மற்றும் அதிகாரிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
கமல்நாத் தனிச்செயலர் பிரவீன் கக்கர், முன்னாள் ஆலோசகர் ஆர்.கே.மிக்லானி ஆகியோரது இந்தூர், போபால், கோவா மற்றும் தில்லி ஆகிய நகரங்களில் அமைந்துள்ள வீடு மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.
அதுமட்டுமல்லாமல் ஹிந்துஸ்தான் பவர் பிராஜட்ஸ் பி.லி. மற்றும் அமிரா குழுமம், மோசர்பேயர் குழுமம் உள்ளிட்ட நிறுவனங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் ம.பி. முதல்வர் கமல்நாத் உறவினர் ரதுல் பூரி, ஹிந்துஸ்தான் நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.
இதில் போபாலில் உள்ள பிரதீக் ஜோஷி வீட்டில் இருந்து ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சோதனைகளில் 300-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர்.