/

உன்னாவ் பெண்ணை எய்ம்ஸ் கொண்டு வந்து சிகிச்சை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உன்னாவ் பெண்ணை லக்னௌவில் இருந்து எய்ம்ஸ் கொண்டு வந்து சிகிச்சை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளனர்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:44 am

DIN


புது தில்லி: சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உன்னாவ் பெண்ணை லக்னௌவில் இருந்து எய்ம்ஸ் கொண்டு வந்து சிகிச்சை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளனர்.

ஒரு வாரத்துக்கும் மேலாக சிகிச்சை பெற்று வரும் உன்னாவ் இளம்பெண்ணின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. இந்த நிலையில் விமானம் மூலம் புது தில்லி கொண்டு வந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில், பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கருக்கு எதிராகப் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடுத்த பெண் சென்று கொண்டிருந்த கார் மீது லாரி ஒன்று மோதியது. இதில், அந்தப் பெண்ணின் உறவினர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அப்பெண்ணும், அவரது வழக்குரைஞரும் லக்னெளவிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவரது நிலை குறித்து மருத்துவர்கள் கூறியதாவது:

செயற்கை சுவாசம் மூலம் அவர் சுவாசித்து வருகிறார். அப்பெண்ணுக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவரது ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைப்பதற்கான சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாகவே உள்ளது. வழக்குரைஞருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரும் கவலைக்கிடமான நிலையிலேயே உள்ளார். இருவரையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.