ஹைதராபாத்: மகாராஷ்டிராவில் பெய்து வரும் அதீத மழை காரணமாக நாகார்ஜுனா சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக, பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த நாகார்ஜுன சாகர் அணையின் 24 மதகுகளும் திறக்கப்பட்டுள்ளன.
இன்று காலை 7 மணிக்கு அணையின் முதல் மதகு திறக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து மதகுகள் திறக்கப்பட்டு, காலை 10 மணியளவில் 10வது மதகு திறக்கப்பட்டது.
இந்த அணைக்கு வினாடிக்கு 8.25 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 5 லட்சம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையின் நீர் மட்டம் 560 அடியை தொட்டுள்ளது. அணையின் முழு நீர்மட்டம் 590 அடியாகும்.
இந்த அணையின் மொத்த நீர் கொள்ளளவு 312 டிஎம்சியாக உள்ள நிலையில், தற்போது 230 டிஎம்சி தண்ணீர் நிரம்பியுள்ளது.
நாகார்ஜுனா அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அதிக மதகுகள் திறக்கப்பட்டிருக்கிறது என்றால், பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஹைதராபாத் பகுதிக்கும் நாகார்ஜுனா அணையில் இருந்து தண்ணீர் அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.