பீகார் மாநில தலைமைச் செயலகத்தில் உள்ள அரசுப் பணியாளர்கள், ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட்டுகளை அணிந்து வர அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.
தலைமைச் செயலக அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வரும் போது எளிமையான, வசதியான மற்றும் வெளிர் நிற உடையை அணியுமாறு அறிவுறுத்தியுள்ளது.
பீகார் மாநில அரசின் தலைமைச் செயலாளர் மகாதேவ் பிரசாத் இது தொடர்பாக பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது, 'அரசு அதிகாரிகளும், ஊழியர்களும் அணிந்து வரும் ஆடைகள், கலாச்சாரத்திற்கு முரணாக உள்ளது. இது முற்றிலும் அலுவலக ஒழுக்கத்திற்கு எதிராக உள்ளது.
எனவே, அலுவலகக் கலாச்சாரத்திற்கு முரணாக ஆடை அணிந்து வரக்கூடாது. எளிமையான, வசதியான மற்றும் வெளிர் நிற உடையை அணிந்து வரலாம். முக்கியமாக ஜீன்ஸ், டி- ஷர்ட் உள்ளிட்டவைகளை அணிந்து வரக்கூடாது. வானிலை மற்றும் வேலையின் தன்மைக்கு ஏற்றவாறு ஆடைகளைத் தேர்வு செய்யுங்கள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோன்று தமிழகத்திலும் அரசு அலுவலங்களில் பணிபுரிவோர் ஜீன்ஸ், டி - ஷர்ட் உள்ளிட்டவைகளை அணியக் கூடாது என்று கடந்த ஜூன் மாதம் அறிவிப்பு வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், தென் மாநிலங்களில் உள்ள பல்வேறு கல்லூரிகளிலும் மாணவ, மாணவிகள் ஜீன்ஸ், டி - ஷர்ட் உள்ளிட்டவை அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது.