அயோத்தி வழக்கில் மத்தியஸ்தரை நியமிக்கலாமா?: மார்ச் 5-ல் உச்ச நீதிமன்றம் உத்தரவு
அயோத்தி பிரச்சனையை சுமூகமாக தீர்க்க மத்தியஸ்தரை நியமிக்கலாமா என்பது குறித்து மார்ச் 5-ல் உத்தரவு பிறப்பிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


புது தில்லி: அயோத்தி பிரச்சனையை சுமூகமாக தீர்க்க மத்தியஸ்தரை நியமிக்கலாமா என்பது குறித்து மார்ச் 5-ல் உத்தரவு பிறப்பிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அயோத்தி வழக்கில் அலாகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010ம் ஆண்டில் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பினரும் சமமாகப் பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. ஆனால், அதை எதிர்த்து 14 மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விவகாரம் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.நஸீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரிக்கிறது.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் கடந்த ஜனவரி மாதம் 29-ஆம் தேதி விசாரணை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், நீதிபதி போப்டே அன்றைய தினத்தில் விடுமுறை என்பதால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெறவுள்ளது.
இதனிடையே, அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை தவிர்த்து, அதைச் சுற்றி கையகப்படுத்தப்பட்ட 67 ஏக்கர் நிலத்தை அவற்றின் உரிமையாளர்களிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய அரசு கடந்த மாதம் 27-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, அயோத்தி நில விவகாரம் தொடர்பான வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்க்கக் கோரி, சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு நிராகரித்துவிட்டது. இதையடுத்து அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் வழிபடுவது எனது அடிப்படை உரிமை; அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி திங்கள்கிழமை கோரிக்கை விடுத்தார்.
ஆனால், அயோத்தி நிலம் தொடர்பான பிரதான வழக்கின் விசாரணை நடைபெறும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு அறிவுறுத்தியது. அப்போது, அவரது கோரிக்கையை பரிசீலிப்பதாக நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் அயோத்தி பிரச்சனையை சுமூகமாக தீர்க்க மத்தியஸ்தரை நியமிக்கலாமா என்பது குறித்து மார்ச் 5-ல் உத்தரவு பிறப்பிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கானது உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
அயோத்தி விவகாரத்தை நிலப்பிரச்சனையாக பார்க்கவில்லை, மத நம்பிக்கை சார்ந்த விஷயமாக பார்க்கிறோம். இரண்டு மதங்கள் இடையே உள்ள பிரச்சனையை சுமூகமாக தீர்க்கவே முயற்சிக்கிறோம். அயோத்தி பிரச்சனையை சுமூகமாக தீர்க்க மத்தியஸ்தரை நியமிக்கலாம் என்று யோசிக்கிறோம். மத்தியஸ்தரை நியமிக்கலாமா என்பது குறித்து மார்ச் 5-ல் உத்தரவு பிறப்பிக்கிறோம்.
ஆறு வார காலத்திற்குள் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மொழிமாற்றம் செய்து வழங்க வேண்டும் என்று பதிவாளருக்கு உத்தரவிடுகிறோம். வழக்கின் முக்கிய விஷயம் எட்டு வாரங்களுக்கு பிறகு விசாரிக்கப்படும். அதேபோல், மனுதாரர்கள் எட்டு வாரத்திற்குள் மொழிமாற்றம் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து, ஆட்சேபம் எதுவும் இருந்தால் தெரிவித்து விட வேண்டும்.
இவ்வாறு தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...