மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் ஆவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறிய அம்மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ், இன்று மம்தா பானர்ஜி பிரதமர் ஆவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நேற்று (சனிக்கிழமை) பிறந்தநாள் வாழ்த்து கூறிய அம்மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ், மேற்கு வங்கத்தில் இருந்து ஒருவர் பிரதமர் ஆக வேண்டும் என்றால் அந்த வாய்ப்பு மம்தா பானர்ஜிக்கு மட்டுமே உள்ளது என்றார்.
மேற்கு வங்கத்தில் எதிரும் புதிருமாக இருக்கும் கட்சிகள், பாஜக - திரிணமூல் காங்கிரஸ். அப்படி இருக்கையில், பாஜக மாநிலத் தலைவர் திலிப் கோஷ் மம்தா பானர்ஜியை குறித்து இந்த கருத்தை தெரிவித்தது கவனம் பெற்றது. அதுவும் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், கூறியது சர்ச்சை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நேற்று கூறிய கருத்துக்கு முரண்படும் வகையில், திலிப் கோஷ் இன்று கூறியதாவது,
"அவருடைய பிறந்தநாளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்தேன். இது எங்களுடைய நடைமுறை. அவருக்கு பிரதமர் ஆவதற்கான வாய்ப்பு ஏதேனும் உண்டா? மேற்கு வங்கத்துக்கு வெளியே அவருடைய கட்சியால் ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெறமுடியுமா? வெகுஜென மக்களுக்கு விடை தெரியும். அவர்கள் அதை நகைச்சுவையாக்குகின்றனர்.
பிரதமர் ஆவதற்கான எந்த சாத்தியக்கூறுகளும் மம்தா பானர்ஜிக்கோ அல்லது திரிணமூல் கட்சியின் எந்த தலைவருக்கோ கிடையாது. ஒருவேளை வருங்காலத்தில் அவர் பிரதமரானால் நான் வாழ்த்து தெரிவிக்கிறேன்" என்றார்.