பிரயாக்ராஜ்: உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் மாவட்டத்தில் கும்பமேளாவிற்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
உலகில் மத ரீதியாக நடத்தப்படும் மாபெரும் விழாக்களில் ஒன்றாக கும்பமேளா கருதப்படுகிறது. நாசிக், பிரயாக்ராஜ், உஜ்ஜைனி, ஹரித்வார் ஆகிய நகரங்களில் சுழற்சி முறையில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நடத்தப்படுகிறது. அதில் உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் மாவட்டத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் "சங்கம்' பகுதியில் நடத்தப்படும் கும்பமேளா, மற்ற இடங்களைக் காட்டிலும் சிறப்புமிக்கதாகும்.
இந்த கும்பமேளா பண்டிகைக்கு "மனிதகுலத்தில் இன்றியமையாத கலாசார பாரம்பரிய விழா' என்று யுனெஸ்கோ அமைப்பு அங்கீகாரம் அளித்தது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த கும்பமேளா நாளை செவ்வாய்கிழமை (ஜன.15) தொடங்கவிருக்கிறது.
இந்நிலையில், கும்பமேளாவிற்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
உலகெங்கிலும் இருந்து சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்ளும் இந்த கும்பமேளாவில், தில்லியில் உள்ள 70 நாடுகளின் தூதர்கள் சிறப்பு விமானம் மூலமாக பிரயாக்ராஜ் சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









