உயிரி பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக ஆயுதப் படைகள் போராட வேண்டும்:  ராஜ்நாத் சிங்

வைரஸ், பாக்டீரியா போன்ற நோய்கிருமிகளை பரப்பி அழிவை ஏற்படுத்தும் உயிரி பயங்கரவாதத்துக்கு எதிராக நமது ஆயுதப் படைகள் போராட வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
உயிரி பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக ஆயுதப் படைகள் போராட வேண்டும்:  ராஜ்நாத் சிங்
Published on
Updated on
1 min read


வைரஸ், பாக்டீரியா போன்ற நோய்கிருமிகளை பரப்பி அழிவை ஏற்படுத்தும் உயிரி பயங்கரவாதத்துக்கு எதிராக நமது ஆயுதப் படைகள் போராட வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் ராணுவ மருத்துவப் பணியாளர்கள் மாநாடு தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் பிரதிநிதிகள் 27 பேர், இந்தியப் பிரதிநிதிகள் 40 பேர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்து ராஜ்நாத் சிங் பேசியதாவது:
பழைய போர்முறை அச்சுறுத்தல்கள் மாறி உலகில் இப்போது நவீன அச்சுறுத்தல்கள் தொடங்கியுள்ளன. ஒவ்வொரு நாளும் விதவிதமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவற்றுள் அதிபயங்கரமானது நோய்கிருமிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தும் உயிரி பயங்கரவாதமாகும். 
வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை உள்ளிட்ட நோய்கிருமிகளை பரப்பி புதுவிதமாக உயிரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர். இதுதான் உண்மையான அச்சுறுத்தல். நோய்க்கிருமி தாக்குதலுக்குத் தீர்வு காண்பது குறித்து இந்த மாநாட்டில் விவாதம் நடத்துகின்றனர். அதன் மூலம் இந்த அச்சுறுத்தலை முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. 
நோய்க்கிருமிகள் மூலம் அழிவை ஏற்படுத்தும் தாக்குதலுக்கு எதிராக போராடுவதில் ராணுவமும், மருத்துவ பணியாளர்களும் முதல் வரிசையில் இருக்க வேண்டும். 
இந்தத் தாக்குதலில் உள்ள சவால்கள் குறித்து ராணுவ மருத்துவர்கள் ஆய்வு செய்ய வேண்டும். நோய்க்கிருமி தாக்குதல் நடத்தப்படுவதால், மக்கள் என்னென்ன பாதிப்புகளை எதிர்கொள்வார்கள் என்பதை முன்கூட்டியே ஆய்வு செய்து, அதை சரிசெய்வதற்கான முறைகளை மருத்துவர்கள் கண்டறிய வேண்டும்.
ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பில் உள்ள நாட்டு மக்கள் நல்ல உடல்நலத்துடன் அமைதியான வாழ்க்கையை வாழ்வதற்கு மற்ற நாடுகளுடன் இணைந்து இந்தியா தனது பங்களிப்பை உறுதியாக அளித்து வருகிறது என்றார் ராஜ்நாத்.
சீனா, ரஷியா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இருந்த ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக இணைந்தன. 
அதன் பின்னர், இந்தியாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் சார்பில் நடத்தப்படும் முதல் ராணுவ கூட்டமைப்பு மாநாடு இதுவாகும். ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பில் உள்ள நாடுகள் பொதுவாக எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வு காணும் வகையில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com