உதித் சூர்யா மற்றும் தந்தை வெங்கடேசனுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசனை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க தேனி மாவட்ட நீதித் துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
2 min read


நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசனை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க தேனி மாவட்ட நீதித் துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக புகார் எழுந்ததையடுத்து, சிபிசிஐடி போலீஸார் மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை  வெங்கடேசனைப் பிடித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், உதித் சூர்யா ஆள்மாறாட்டம் செய்ததை ஒப்புக்கொண்டதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து, உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசனை சிபிசிஐடி போலீஸார் கைது செய்து தேனி மாவட்ட நீதித் துறை நடுவர் நீதிமன்றம் முன் ஆஜர்படுத்தினர்.

அப்போது, உதித் சூர்யாவையும், வெங்கடேசனையும் அக்டோபர் 10-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதித் துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக, உதித் சூர்யா என்ற மாணவர் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்றிருப்பதாக தேனி மருத்துவக் கல்லூரி நிர்வாகத்துக்கு மின்னஞ்சல் மூலமாக புகார் வந்தது. 

அதன் அடிப்படையில் கல்லூரிப் பேராசிரியர்கள், உதித் சூர்யாவிடம் விசாரணை செய்தனர். இதில் உதித் சூர்யா, முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர், அவர் திடீரென தலைமறைவானார்.

இதையடுத்து, உதித் சூர்யாவின் நீட் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டை மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர் ஆய்வு செய்தனர். அப்போது, அதில் ஒட்டப்பட்டிருந்த புகைப்படத்துக்கும், உதித் சூர்யாவுக்கும் தொடர்பு இல்லை என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் சார்பில் தேனி மாவட்ட காவல் துறையில் புகார் செய்யப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் இரு பிரிவுகளின் கீழ் உதித் சூர்யா மீதும், அவருக்கு தேர்வு எழுதிய நபர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில், உதித் சூர்யா ஏற்கெனவே இரு முறை நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்ததால், மூன்றாவது முறையும் தோல்வியடைந்துவிட்டால் மருத்துவம் படிக்க முடியாது என்பதால், உதித் சூர்யா ஏற்கெனவே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரு நபரை ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத வைத்திருப்பதும், முறைகேட்டில் சிக்காமல் இருப்பதற்கு மும்பையில் தேர்வு எழுதியிருப்பதும் தெரியவந்தது. பின்னர் அந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. 

இதன் அடிப்படையில் மாணவர் உதித் சூர்யாவைத் தொடர்ந்து தேடி வந்த சிபிசிஐடி போலீசார் புதனன்று  திருப்பதியில் அவரையும் அவரது தந்தையையும் சுற்றி வளைத்தனர். இந்நிலையில், இன்று காலை தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரனிடமும், துணை முதல்வர் எழிலரசனிடமும் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். இதன்பிறகு, சிபிசிஐடி டிஎஸ்பி ஆஸ்டின் தலைமையில் தேனி மருத்துவக் கல்லூரியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இதையடுத்து, மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் மாணவர் உதித் சூர்யா ஆள்மாறாட்டம் செய்ததை ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து, மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com