
கோரக்பூர் அரசு மருத்துவமனையில் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர் கஃபீல் கான் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உள்ள 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் உள்ள மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
இது தொடர்பான வழக்கில் அங்கு பணிபுரிந்த மருத்துவர் கஃபீல் கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். 2 ஆண்டுகளுக்கு பணியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார். பின்னர், 9 மாத சிறைத்தண்டனைக்கு பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த சம்பவத்தில் மருத்துவர் கஃபீல் கான் மீதுள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க தனிக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழு விசாரணை செய்து இன்று நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதன்படி, மருத்துவர் கபீல் கான் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, அரசு மருத்துவமனை தவிர வேற தனியார் இடத்தில் அவர் வேலை செய்ததற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விபத்தில் குழந்தைகள் உயிருக்கு போராடிய போது, அவர் அலட்சியமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், குழந்தைகளைக் காப்பாற்றவே மருத்துவர் கபீல் கான் முயற்சி செய்தார் என்றும் மருத்துவமனையில் அவர் அலட்சியமாக நடந்துகொள்ளவில்லை என்றும் அறிக்கையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, மருத்துவர் கஃபீல் கான் கைது செய்யப்பட்ட போதே, அவருக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் குரல்கள் வலுத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.