எரிந்தபடியே செல்போனைப் பிடுங்கி போலீஸை அழைத்த உன்னாவ் பெண்: பரிதாபத்தின் உச்சக்கட்டம்
உன்னாவ்: உன்னாவ் பகுதியில் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பெண்ணை, பெயிலில் வந்த குற்றவாளிகள் பெட்ரோல் ஊற்றி எரித்ததில் 90% தீக்காயம் அடைந்தார். இவர் மேல் சிகிச்சைக்காக விமானம் மூலம் தில்லி கொண்டு செல்லப்படுகிறார்.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் ஓராண்டு முன்பு ஒரு பெண்ணை இரண்டு பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவர்கள் மீது வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளிகள், தாங்கள் பலாத்காரம் செய்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
90% தீக்காயத்துடன் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வரும் அப்பெண்ணை, மேல்சிகிச்சைக்காக தில்லிக்கு விமானம் மூலம் கொண்டு செல்லும் பணியை மாநில அரசு மேற்கொண்டுள்ளது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர் சம்பவம் பற்றி கூறியிருப்பது நெஞ்சை பதற வைப்பதாக உள்ளது.
பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண் உதவிக் கேட்டு கதறிய நிலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஓடினார். அவருக்கு அருகே நான் சென்ற போது, எனது கையில் இருந்த செல்போனைப் பிடுங்கி, அவரே காவல்துறை அவசர எண்ணைத் தொடர்பு கொண்டு காவல்துறையை உதவிக்கு அழைத்தார்.
உதவி கேட்டு அவர் கதறினார். அவரிடம் நீங்கள் யார் என்று கேட்டதற்கு, அவர் தனது பெயரை என்னிடம் சொன்னார். எனக்கு அவரைப் பார்க்கும் போது சற்று பயமாக இருந்தது, ஏன் என்றால் அவர் பயங்கரமாக எரிந்து இருந்தார். உடனடியாக காவல்துறையினர் வந்து அவரை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் என்றார் பதற்றம் தணியாமல்.