ஒடிசாவில் முப்பதுக்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளைக் கொண்ட தனியார் மருத்துவமனைகள் கரோனா சிகிச்சை மையங்களாக செயல்பட அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
ஒடிசா மாநிலத்தில் கரோனா தொற்று பாதிப்பானது நாள்தோறும் அதிகரித்து வருகிறது. தொற்றுப் பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
அந்தவகையில் 30 அல்லது அதற்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் கொண்ட தனியார் மருத்துவமனைகள் கரோனா சிகிச்சை மையங்களாக செயல்பட ஒடிசா மாநில அரசு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.
கரோனா சிகிச்சை மையங்களாக செயல்படும் தனியார் மருத்துவமனைகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசின் விதிமுறைகளை மீறும் தனியார் மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ள தனியார் மருத்துவமனைகள் அனைத்து படுக்கைகளிலும் குறைந்தபட்சம் 10 சதவீதத்தை கரோனா சிகிச்சைக்காக ஒதுக்க வேண்டும் மாநில அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.