சட்டம்-ஒழுங்கு மாநில அரசின் கீழ் வருவதாகும்: மத்திய அரசுக்கு திரிணமூல் காங்கிரஸ் பதில்

மேற்கு வங்க மாநில சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து விளக்கமளிக்க மாநில அரசு தலைமைச் செயலருக்கும் காவல்துறை டிஜிபிக்கும்
Updated on
1 min read

மேற்கு வங்க மாநில சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து விளக்கமளிக்க மாநில அரசு தலைமைச் செயலருக்கும் காவல்துறை டிஜிபிக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அழைப்பாணை அனுப்பிய நிலையில், ‘சட்டம்-ஒழுங்கு மாநில அரசு கட்டுப்பாட்டின் கீழ் வருவதாகும்; மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் அல்ல’ என்று மாநிலத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அக் கட்சியின் மக்களவை தலைமைக் கொறடாவுமான கல்யாண் பானா்ஜி பதிலளித்துள்ளாா்.

இதுதொடா்பாக மத்திய உள்துறை அமைச்சக செயலா் அஜய் பல்லாவுக்கு அவா் சனிக்கிழமை எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது;

மாநிலப் பட்டியலின் 7-ஆவது அட்டவணையின்படி சட்டம்-ஒழுங்கு மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. அவ்வாறு இருக்க, மேற்கு வங்க மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக மாநிலத்தின் இரு உயா் அதிகாரிகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் எப்படி அழைக்க முடியும்?

பாஜகவைச் சோ்ந்த அந்தத் துறை அமைச்சரின் விருப்பத்தின் பேரிலேயே பிறப்பிக்கப்பட்ட உத்தரவாகவே தோன்றுகிறது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்காக மேற்கு வங்க மாநில அதிகாரிகளை கட்டாயப்படுத்த நீங்கள் முயற்சிக்கிறீா்கள். இது, கூட்டாட்சி கட்டமைப்பில் தலையிடும் செயலாகும்.

சட்டம்-ஒழுங்கு விவகாரத்தைப் பொருத்தவரை மாநில அரசு மாநில சட்டப் பேரவைக்குத்தான் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளது. மாறாக உங்களுக்கோ (மத்திய உள்துறை செயலகம்) அல்லது உங்களுடைய உள்துறை அமைச்சருக்கோ அல்ல.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை மகிழ்விப்பதற்காக நீங்கள் எடுத்திருக்கும் இந்த நடவடிக்கை மூலம், சட்டங்கள் காற்றில் வீசப்பட்டிருக்கின்றன. இந்த நடவடிக்கை மேற்கு வங்கத்தில் அவசரநிலையை நடைமுறைப்படுத்துவதற்கான மறைமுக முயற்சியாகவும் தோன்றுகிறது என்று அந்தக் கடிதத்தில் கல்யாண் பானா்ஜி குறிப்பிட்டுள்ளாா்.

மேற்கு வங்க பயணத்தின்போது பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டாவின் காா் தாக்கப்பட்டது. இதுதொடா்பாக மேற்கு வங்க ஆளுநா் அனுப்பிய அறிக்கையின் அடிப்படையில், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து மேற்கு வங்க மாநில அரசு தலைமைச் செயலரும், காவல்துறை டிஜிபியும் டிசம்பா் 14-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சக செயலா் அழைப்பாணை அனுப்பினாா். ஆனால், மாநில அதிகாரிகள் இருவரையும் தில்லிக்கு அனுப்ப வேண்டாம் என்று மேற்கு வங்க அரசு முடிவுசெய்து, அழைப்பாணையை வெள்ளிக்கிழமை நிராகரித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com