உத்தரப் பிரதேசத்தில் திருமண கொண்டாட்டத்துக்கு கூடுதல் மது கொடுக்கவில்லை என்பதால் நண்பர்களாலே புதுமாப்பிள்ளை படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இதுபற்றி காவல் துறையினர் தெரிவித்தது:
"இந்த சம்பவம் திங்கள்கிழமை இரவு நடந்துள்ளது. திருமணம் முடிந்தவுடன் பப்லு (28) தனது நண்பர்களைச் சந்திக்க சென்றுள்ளார். அப்போது அவரது நண்பர்கள் ஏற்கெனவே அதிகளவில் மது அருந்தி போதையில் இருந்துள்ளனர். மேற்கொண்டு மது வாங்கித் தருமாறு பப்லுவிடம் கேட்டுள்ளனர். ஆனால், பப்லு தன்னால் இதற்கு ஏற்பாடு செய்ய முடியாது என்று கூறிவிட்டார்.
இதனால், அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஒரு நண்பர் ஆத்திரத்தில் பப்லுவைக் கடுமையாகத் தாக்கினார். இதையடுத்து, பப்லு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் பலியாகிவிட்டார்."
இதுபற்றி வட்டார அலுவலர் நரேஷ் சிங் புதன்கிழமை தெரிவித்தது:
"இந்த வழக்கு தொடர்பாக முக்கியக் குற்றவாளி ராம்கிலாடி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். மற்ற 5 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள்" என்றார்.