ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளவர்களுக்காக, 6000 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீருக்கு அரசியல் சாசனப் பிரிவு 370-இன் கீழ் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. அதையடுத்து அங்கு சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முதலில் அதை கடந்த வருடம் அக்டோபர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டு, பின்னர் கைவிடப்பட்டது. தற்போது வரும் ஏப்ரல் மாதம் அந்த மாநாடு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளவர்களுக்காக, 6000 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக ஸ்ரீநகரில் புதனன்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த மாநில சிட்கோ மேலாண் இயக்குநர் ரவீந்தர் குமார் கூறியதாவது:
வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள முதலீட்டாளர் மாநாடானது மூன்று நாட்கள் நடைபெறும். ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு ஆகிய இரு இடங்களிலும் நடத்தும் திட்டமுள்ளது.
இந்த மாநாட்டில் சர்வதேச முதலீட்டாளர்களுடன் உள்ளூர் தொழிலதிபர்கள் மற்றும் நாட்டின் இதர பகுதிகளில் இருக்கும் தொழில் நிறுவனங்கள் சார்ந்தோரும் கலந்து கொள்ளலாம்.
இந்த மாநாட்டிற்காக பிற மாநிலங்களில் கவன ஈர்ப்பிற்காக சாலை நிகழ்வுகள் மற்றும் கருத்தரங்கங்கள் நடத்தும் திட்டமுள்ளது.
முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளவர்களுக்காக, 6000 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது. அதில் ஜம்மு
பிராந்தியத்தில் சம்பா மற்றும் கத்வா மாவட்டங்களிலும், ஸ்ரீநகர் பிராந்தியத்தில் புல்வாமா மற்றும் அனந்த்நாக் மாவட்டங்களிலும் நிலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.