நாடு முழுவதுமுள்ள குழந்தைகள் காப்பகங்களுக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் நிதி குறித்த விவரங்களைத் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ராயபுரத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் 35 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் கரோனா தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தானாக முன்வந்து உச்ச நீதிமன்றம் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதனடிப்படையில், இன்று, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையில் தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு கூடுதல் வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன், “இணைய வழிக் கல்விக்காக ஒவ்வொரு காப்பகத்துக்கும் ஆண்டுதோறும் 5.5 லட்ச ரூபாய் வீதம் மாநில அரசால் வழங்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து, நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் கௌரவ் அகர்வால், காப்பத்தின் கட்டமைப்பு மேம்பாட்டுக்காக 100% நிதியை மத்திய அரசே ஒதுக்க வேண்டும் என மாநிலங்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, நாடு முழுவதிலும் உள்ள குழந்தைகள் காப்பகங்களுக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் நிதி குறித்த விவரங்களைத் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனையடுத்து இந்த வழக்கு மீதான விசாரணையை வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.