ஸ்ரீநகர்: வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே தானியங்கி இயந்திரத் துப்பாக்கிகள் உள்பட பயங்கரவாதிகளின் மிகப்பெரிய ஆயுதக் குவியலை இந்திய ராணுவம் கண்டுபிடித்துள்ளது.
இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியிருப்பதாவது, இந்திய ராணுவத்துக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் புதன்கிழமை மாலை பாரமுல்லா மாவட்டம் ராம்புர் செக்டாரில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இந்த தேடுதல் வேட்டையில் பயங்கரவாதிகளின் ஆயுதக் குவியல் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஏ.கே. 47 துப்பாக்கி, 5 சீனத் துப்பாக்கிகள், 24 கிரானைட் வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் அனைத்தும் புதியவை என்றும், அனைத்து ஆயுதங்களிலும் அதன் விவரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை, காஷ்மீரின் பிற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதற்காக எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.