பிகார் தேர்தலில் தேர்தல் ஆணையம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக செயல்பட்டதாக ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
243 உறுப்பினர்களைக் கொண்ட பிகார் சட்டமன்றத் தேர்தலில் 125 இடங்களுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. தேஜஸ்வி தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் 75 இடங்களைப் பெற்று மிகப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில் வியாழக்கிழமை பிகார் தேர்தல் முடிவுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் பிகார் முன்னாள் முதல்வர் ரப்ரி தேவி இல்லத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தேஜஸ்வி யாதவ் தங்களது கூட்டணிக்கு வாக்களித்ததற்காக பிகார் மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தை குற்றம்சாட்டிய அவர்,“ மக்களின் ஆதரவு மகா கூட்டணிக்கு இருந்தது. ஆனால் தேர்தல் ஆணையம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக செயல்பட்டது” என்றார்.
மேலும், “2015ஆம் ஆண்டில் மகா கூட்டணி உருவானபோது, மக்களின் ஆதரவு எங்களுடன் இருந்தன. ஆனால் பாஜக அதிகாரத்தைப் பெற பின்வாசல் வழியாக நுழைந்தது.” எனத் தெரிவித்தார்.