தில்லியில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசுடன் வணிகர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.
தில்லியில் மேலும் கரோனா பரவாமல் தடுப்பதில் வணிகர் சங்கம் மிக முக்கிய பங்காற்றுவதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய முதல்வர் அரவிந்த் கேஜரிவால், ''சந்தைப் பகுதிகளில் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் வணிகர் சங்கங்களின் ஒத்துழைப்பை உறுதி செய்யும் வகையில் வணிகர் சங்க பிரதிநிதிகளை இன்று சந்தித்தேன். சந்தைகளில் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் வணிகர்களுக்கு மிக முக்கிய பங்குள்ளது.
கரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வந்தாலும், எந்த சந்தைகளையும் முடக்குவதற்கு அரசு விரும்பவில்லை. சந்தைகளுக்கு முகக்கவசம் அணியாமல் வரும் மக்களுக்கு வணிகர் சங்கம் சார்பில் இலவச முகக்கவசம் வழங்கப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அனைத்துக் கடைகளிலும் கூடுதலாக முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது'' என்று கூறினார்.