கரோனா தொற்றுப் பரவல் காரணமாக மணிப்பூரில் இந்தாண்டு இறுதி வரை மாநிலத்தில் மாலை 6 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவை அரசு அறிவித்துள்ளது.
கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எனினும் மாநில தொற்றுப் பரவல் நிலைகளுக்கேற்ப அவ்வப்போது பொது முடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்படுகின்றன.
இந்நிலையில், மணிப்பூர் மாநில அரசு உத்தரவின்படி, டிசம்பர் 31 வரை இரவு நேரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை இது நீடிக்கும் என்று அறிவித்துள்ளது.
அத்தியாவசிய சேவைகள், சரக்கு லாரிகள் மற்றும் கடமையில் உள்ள அதிகாரிகள் ஆகியோருக்கு இந்த உத்தரவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், சமூக மற்றும் வழக்கமான விழாக்களில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி, மாநிலத்தில் 3,245 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.