லக்னெள: உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகளின் நலம் மற்றும் விவசயத்துறையின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரப்பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - சர்வதேச உணவு மற்றும் விவசாய வாரத்தை காணொலி காட்சி வாயிலாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடக்கி வைத்தார்.
பின்னர் பேசிய அவர், ''கரோனா வைரஸ் தொற்று பரவிவரும் நிலையில், இடையூறு இல்லாமல் பயிர்கொள்முதல் செய்வதை அரசு உறுதிசெய்யும் என்று கூறினார்.
உத்தரப்பிரதேசத்தில் கரோனா முன்னெச்சரிக்கை மற்றும் வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி 100 சர்க்கரை ஆலைகள் இயங்கி வருகின்றன.
ஊரடங்கில் கோதுமைப் பயிர் அறுவடைக்கு தயாராக உள்ளதால், 6000 கோதுமை கொள்முதல் நிலையங்கள் கரோனா தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மையங்கள் மூலம் 36 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை உற்பத்தி செய்யப்படுகிறது.
விவசாய விளைப்பொருள்களுக்காக அடுத்த நான்கு ஆண்டுகளில் 5000 கிடங்குகளைக் கட்ட உத்தரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது'' என்றும் அவர் கூறினார்.