லேஹ்: இந்திய - சீன சர்வதேச எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதாகவும், ராணுவம் தயார் நிலையில் இருப்பதாகவும் ராணுவ தலைமைத் தளபதி எம்.எம். நரவணே தெரிவித்துள்ளார்.
கிழக்கு லடாக்கில் பாதுகாப்புச் சூழலை ஆய்வு செய்வதற்காக, ராணுவத் தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே இரண்டு நாள் பயணமாக வியாழக்கிழமை லடாக் சென்றாா். அங்கு அவர் பாதுகாப்பு நிலைகளை நேரில் ஆய்வு செய்தார்.
எல்லை நிலவரங்கள் குறித்து வெள்ளிக்கிழமை காலை நரவணே கூறுகையில், இந்தியா - சீனா சர்வதேச எல்லைக் கோட்டுப் பகுதியில் தற்போது நிலைமை பதற்றமாக உள்ளது, நிலைமையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
நேற்று லேஷ் பகுதிக்கு வந்தேன். பல்வேறு பகுதிகளுக்கும் சென்று, அதிகாரிகள் மற்றும் வீரர்களுடன் பேசினேன். பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆய்வு செய்தேன். எந்த விதமான சவாலையும் எதிர்கொள்ளவும் இந்திய வீரர்கள் மிகுந்த தைரியத்துடன் இருக்கிறார்கள், உலகிலேயே நமது வீரர்கள் தான் சிறந்தவர்கள் என்பதை என்னால் இங்கே சொல்ல முடியும் என்று நரவணே தெரிவித்துள்ளார்.
தற்போது எல்லையில் காணப்படும் சூழ்நிலை சற்று கவனிக்கத்தக்கதாக, பதற்றமாகவே இருக்கிறது. ஆனால் அது பற்றி நாம் கவனத்தில் கொண்டுள்ளோம். நமது பாதுகாப்பை பொறுத்தமட்டியில் தேவையான சில நடவடிக்கைகளை எடுத்துள்ளோம், தற்போதிருக்கும் நிலைமையில் மாற்றமில்லாமல் நீடிக்க உறுதி மேற்கொண்டுள்ளோம் என்றும் கூறியுள்ளார்.