இந்தியாவில் கரோனா இறப்பு விகிதம் 2.82 சதவிகிதமாக உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தகவல் தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில் அவர் கூறியதாவது:
நம் நாட்டில் COVID-19 காரணமாக ஏற்படும் இறப்பு விகிதம் 2.82 சதவிகிதம் ஆகும், இது உலகின் மிகக் குறைந்த ஒன்றாகும். இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை மட்டும் பார்க்கக் கூடாது. இந்தியாவின் மக்கள்தொகையும் கருத்தில்கொள்ள வேண்டும்.
இந்தியாவைப் போலவே மக்கள்தொகையைக் கொண்ட மேலும் 14 நாடுகள், நம்மை விட 22.5 மடங்கு அதிகமாக கரோனா பாதிப்புகளையும், 55.2 மடங்கு கரோனா இறப்புகளையும் கொண்டுள்ளன.
இந்தியாவில் கரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் மீட்பு விகிதமும் அதிகரித்து வருகிறது. இதுவரை 95,527 கரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 3,708 பேர் குணமடைந்துள்ளனர். மீட்பு விகிதம் தற்போது 48.07 சதவீதமாக ஆக உள்ளது, கடந்த ஏப்ரல் 15 அன்று இது 11.42 சதவீதமாக இருந்தது என்று தெரிவித்தார்.
மேலும், 'உலகளாவிய இறப்பு விகிதம் 6.13 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் இறப்பு விகிதம் 2.82 சதவீதமாகும். இது உலகிலேயே மிகக் குறைவானது.
கரோனா நோயாளிகளை சரியான நேரத்தில் அடையாளம் காணுதல் மற்றும் முறையான சிகிச்சை காரணமாகவே இதனை எங்களால் அடைய முடிந்தது' என்று கூறினார்.