இந்தியப் பகுதியை ஆக்கிரமிக்க நினைத்த சீனாவின் அத்துமீறலுக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்தது என மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) மனதின் குரல் வானொலி உரையில் பேசிய பிரதமர் மோடி,
லடாக் எல்லையில் இந்தியப் பகுதியை ஆக்கிரமிக்க நினைத்த சீனாவின் அத்துமீறலுக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்தது. இந்தியாவுடன் யாரும் மோத முடியாது. நமது எல்லைகளை பாதுகாப்பதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை உலக நாடுகள் இதன் மூலமாக கண்டது.
சீனத் தாக்குதலுக்குப் பிறகு உள்நாட்டுப் பொருள்களை வாங்க வேண்டும் என்று அனைவரும் உறுதி ஏற்று வருகின்றனர். இதன் மூலமாக இந்தியா சுயசார்பை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது.
கரோனா அச்சுறுத்தல் மற்றும் பல்வேறு பிரச்னைகளால் 2020 ஆம் ஆண்டு எப்போது முடியும் என்று மக்கள் நினைக்கின்றனர். இது நமக்கு ஒரு சவால். இந்த சவால்களில் வெற்றி பெற்றுள்ளதை நம் வரலாறு பேசும். சவால்களை சமாளிப்பதன் மூலமாக நாம் வலுப்பெற்றுள்ளோம் என்று பேசினார்.