கேரளத்தில் மேலும் இருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் கேரளத்தில் 17 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) மேலும் இருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அம்மாநிலத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. இதில், 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் ஊடகங்களிடம் பேசுகையில்,
"ஒருவர் துபையில் இருந்து வந்துள்ளார். அவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, அவர் கண்ணூரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இரண்டாவது நபருக்கு இன்று கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டது. அவர் கத்தாரில் இருந்து வந்துள்ளார். தற்போது அவர் திருச்சூரில் உள்ளார்" என்றார்.