புது தில்லி: இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரத்தில் 64 வயது முதியவர் பலியான நிலையில், நாட்டில் கரோனா பாதித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் மேலும் இரண்டு பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் பிரான்ஸ் சென்று வந்தவர். இருவருமே தனிப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் கலபுர்கியில் கடந்த வாரம் கரோனா பாதித்து உயிரிழந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கும் கரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் 63 வயதாகும் மருத்துவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மத்திய இணை அமைச்சர் முரளீதரன், கரோனா அறிகுறிகள் காரணமாக தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அதே சமயம், கேரளத்திலும் ஸ்பெயினில் இருந்து திரும்பிய மருத்துவருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
மகாராஷ்டிரத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்த நிலையில், நல்வாழ்வுத்துறை அமைச்சர் தலைமையில் அவசரக் கூட்டம் நடத்தப்பட்டது.
லடாக்கில் மேலும் 3 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் லடாக்கில் மட்டும் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.