வெளிநாடுவாழ் இந்தியர்கள் 276 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
சீனாவில் உருவான கரோனா வைரஸ் இன்று உலகில் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்தியாவிலும் கரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 147 ஆகவும் பலியானோர் எண்ணிக்கை 3 ஆகவும் உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக கரோனா தொற்றை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் எத்தனை பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, அதிகபட்சமாக ஈரானில் 255 பேர், ஐக்கிய அரபு அமீரகத்தில் 12 பேர், இத்தாலியில் 5 பேர், ஹாங்காங், குவைத், ருவாண்டா, இலங்கையில் தலா ஒருவர் என மொத்தம் 276 வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு கரோனா பாதிப்பு உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.