தற்சார்பு இந்தியா திட்டத்தின் இன்றைய 7 முக்கிய அறிவிப்புகள்!

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் 5 ஆம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார்.
தற்சார்பு இந்தியா திட்டத்தின் இன்றைய 7 முக்கிய அறிவிப்புகள்!


பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் 5 ஆம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் 7 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். 

► ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ஏற்கனவே ரூ. 61,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ரூ. 40,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது

► ஒவ்வொரு மாவட்டத்திலும் தொற்றுநோய் தடுப்பு மையங்கள் அமைக்கப்படும். வட்டார அளவில் பொது சுகாதார மையங்கள் அமைக்கப்படும். இதற்காக சுகாதாரத் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும். 

► 'ஒரே நாடு ஒரே டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்' என்பதன் அடிப்படையில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு டிவி சேனல் தொடங்கப்படுகிறது. ஆன்லைன் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் 'இ-வித்யா' என்ற இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு டிவி சேனல் தொடங்கப்படும்.

மே 30 ஆம் தேதி முதல் 100 பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வகுப்புகளை தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கென மின்- பாடங்கள் உருவாக்கப்படும். 

► கரோனா காலத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரிசெய்யும் வகையில் நிறுவனங்கள் திவாலாவது தொடர்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரூ. 1 கோடி வரை வசூல் செய்யப்பட வேண்டிய நிறுவனங்கள் மட்டுமே திவாலானதாக அறிவிக்கப்படும். முன்னதாக இது ரூ. 1 லட்சமாக இருந்த நிலையில், தற்போது ரூ. 1 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்கள் திவாலாகும் நிலை ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்கும் காலம் 6 மாதத்தில் இருந்து ஓராண்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக நிறுவன விதிமுறை மீறல்கள் தொடர்பான நடவடிக்கைகள் குறைக்கப்பட்டுள்ளன.

► தொழில்துறைக்கான விதிமுறைகள் எளிமையாக்கப்படுகிறது. சிறு, குறு தொழில்துறைக்கான சிறப்பு திவால் சட்டம் உருவாக்கப்படும். 

► பொதுத்துறை நிறுவனங்களில் காலத்துக்கேற்ற முறையில் கொள்கை முடிவுகள் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட துறைகள் தவிர்த்து மற்ற துறைகள் அனைத்தும் தனியார் மயமாக்கப்படும். ஒரு துறையில் 10 நிறுவனங்கள் இருந்தால் அது உத்தி சார்ந்த நிறுவனமாக இருந்தால் அவை 4 அல்லது 5 ஆக ஒன்றாக இணைக்கப்படும். இதுகுறித்து விரிவான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். 

உத்திசார்ந்த துறைகளைத் தவிர மற்ற அனைத்துத் துறைகளிலும் ஒரு தனியார் பங்களிப்பு இருக்க அனுமதி வழங்கப்படும். 

► கடந்த ஏப்ரல் மாதத்துக்கான மாநில வரிப்பங்கீடு ரூ.46,038 கோடி முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. வருவாய் பற்றாக்குறை மானியமாக மாநிலங்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் ரூ.12,390 கோடி மற்றும் மாநில பேரிடர் நிதியாக ரூ.11,092 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் மத்திய சுகாதாரத்துறையில் இருந்து ரூ.4,113 கோடி வழங்கப்பட்டுள்ளது. 

► மாநிலங்களுக்கான கடன் வரம்பு 3% ஆக இருந்த நிலையில் 5% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 2020-21 ஆம் நிதியாண்டில் மாநிலங்கள் தங்கள் உள்நாட்டு உற்பத்தியில் 5% வரை உலக நிறுவனங்களிடம் இருந்து கடன் பெறலாம். 

மாநிலங்களுக்கு அளிக்கப்பட்ட கடன் வரம்பில் 14% மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ரூ.6.41 லட்சம் கோடியாக மாநிலங்களுக்கான கடன் வரம்பு இருந்த நிலையில் தற்போது கூடுதலாக ரூ.4.28 லட்சம் கோடி மாநிலங்கள் கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

► கடன் வரம்பு நிபந்தனைகள்:

கடன் வரம்பில் 3 முதல் 3.5%  பெற எந்தவித நிபந்தனையும் இல்லை. 4.5% வரை கடன் வரம்பு பெற கீழ்குறிப்பிட்டுள்ள மத்திய அரசின் திட்டடங்களை மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும். 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு', மின்சார பங்கீடு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு, எளிமையான வணிகம் எனும் நான்கு திட்டங்களில் 3 திட்டங்களை மாநிலங்கள் செயல்படுத்தினால் கூடுதலாக 0.5% கடனையும் மாநிலங்கள் பெறலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com