மத்திய விசாரணை நிறுவனங்களை பாஜக அரசு தங்களது அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தி வருவதாக சிவசேனையின் அதிகாரப்பூர்வ இதழான சாமனா குற்றம்சாட்டியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கேளிக்கை விடுதிகள், உணவகங்களில் மாதந்தோறும் ரூ. 100 கோடி வசூலிக்குமாறு காவல் துறை அதிகாரிகளிடம் மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் வலியுறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை மும்பை உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை 15 நாள்களுக்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ குறித்து சிவசேனை கட்சியின் அதிகாரப்பூர்வ இதழான சாமனா விமர்சனம் தெரிவித்துள்ளது. அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக சட்டம் மற்றும் மத்திய விசாரணை நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக விமர்சித்துள்ளது.
அனில் தேஷ்முக் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ள நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திலும் முறையிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.