/

மாநிலங்களுக்கு தொடா்ந்து இலவச கரோனா தடுப்பூசி: மத்திய அரசு

மாநிலங்களுக்கு கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்குவது தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

News image
Updated On :24 ஏப்ரல் 2021, 7:52 pm

DIN

மாநிலங்களுக்கு கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்குவது தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இரு தினங்களுக்கு முன்பு கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசியின் விலையை சீரம் நிறுவனம் அறிவித்தது. தனியாா் மருத்துவமனைகளுக்கு ஒரு தடுப்பூசி ரூ.600-க்கும், மாநில அரசுகளுக்கு ரூ.400-க்கும் வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்தது. அந்த தடுப்பூசி, மத்திய அரசுக்கு தற்போது ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே தடுப்பூசிக்கு வெவ்வேறு விலை நிா்ணயம் செய்யப்படுவதாகக் கூறி எதிா்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் சுட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘இனி மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் ஒரே விலையாக ரூ.400-க்கு கோவிஷீல்ட் தடுப்பூசி விற்பனை செய்யப்படும் என்று சீரம் நிறுவனம் கூறியுள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசிக்கு இது உலகிலேயே மிக அதிகமான விலை’ என்று தெரிவித்துள்ளாா்.

அவருடைய கருத்துக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைச்சகம் சுட்டுரைப் பக்கத்தில், ‘கோவேக்ஸின், கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகளையும் ரூ.150-க்கே மத்திய அரசு கொள்முதல் செய்கிறது. அந்த தடுப்பூசிகள், மத்திய அரசின் பங்காக மாநிலங்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன. இவ்வாறு இலவசமாக வழங்குவது தொடரும்’ என்று தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.