கரோனா தொற்று பரவலின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக உத்தரப்பிரதேசத்தில் வார இறுதி நாள்களில் பொதுமுடக்கத்தை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கரோனா தொற்றால் பலியாகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. பலியானவர்களை எரியூட்ட சுடுகாடுகளில் சடலங்கள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மேலும் 3 நாள்களுக்கு பொதுமுடக்கத்தை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி பொதுமுடக்க கட்டுப்பாடுகள் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை காலை 7 மணி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி அனைத்து சந்தைகள், தனியார் மற்றும் பொது அலுவலகங்கள் வெள்ளிக்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் உணவகங்கள், மருந்துக் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு பொதுமுடக்கத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தற்போது 3 லட்சத்து 41 பேர் கரோனா தொற்று பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.