உத்தர பிரதேச முன்னாள் முதல்வா் கல்யாண் சிங் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், அவரது வீட்டிற்கு நேரில் சென்று பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.
உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், ராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநருமான கல்யாண் சிங் சனிக்கிழமை காலமானார். அவருக்கு பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்திவருகின்றனர். லக்னெளவில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாக் ஆகியோரும் கல்யாண் சிங்குக்கு மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மோடி, "ஒரு திறன் வாய்ந்த தலைவரை இழந்துள்ளோம். நேர்மை மற்றும் நல்ல நிர்வாகத்தின் மறு உருவமாக அவர் திகழ்கிறார்.
கல்யாண் சிங்குக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரின் விழுமியங்கள், மன உறுதி ஆகியவற்றை பின்பற்ற அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும்.
அவரின் கனவை நிறைவேற்ற அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். கல்யாண் சிங்கை இழந்து வாடும் அவரின் குடும்பத்தாருக்கு மன வலிமை அளிக்க பிரார்த்திக்கிறேன்" என்றார்.