சொகுசு கப்பலில் போதை பொருள் சிக்கிய விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவரான நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானுக்கு, மும்பையில் உள்ள போதை தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் அவர் போதை தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்பது ஜாமீன் வழங்கும்போது நிபந்தனையாக விடுக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த நிபந்தனையை மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ஆனால், சிறப்பு புலனாய்வு குழு அழைக்கும் சமயங்களில் தில்லியில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிபந்தனையில் திருத்தம் மேற்கொள்ளக் கோரி உயர் நீதிமன்றத்தில் ஆர்யன் கான் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதுகுறித்து அவர் தாக்கல் செய்த மனுவில், "ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் வருகை தரும் போது, ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தும் தொனியில் பார்க்க வருகின்றனர். காவல்துறையினருடன் செல்ல வேண்டியுள்ளது. இந்த வழக்கின் விசாரணை தில்லியில் உள்ள சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு மாற்றப்பட்டுள்ளதால், மும்பை அலுவலகத்திற்கு ஆஜராக வேண்டும் என நிபந்தையை தளர்த்தலாம்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிக்க | லக்கீம்பூர் வன்முறை திட்டமிட்ட சதி: சிறப்பு விசாரணைக் குழு
போதைப்பொருள் தடுப்பு ஏஜென்சியால் ஆர்யன் கான் அக்டோபர் 3 ஆம் தேதி மும்பை கடற்கரை அருகே சொகுசு கப்பலில் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார். தடை செய்யப்பட்ட போதை பொருள்களை வைத்திருந்தது, உட்கொண்டது, விற்பனை செய்தது, வாங்கியது போன்ற குற்றம் சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது. சதிச் செயலில் ஈடுபட்டது, உடந்தையாக இருந்தது போன்ற குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
அக்டோபர் 28 அன்று, கைது செய்யப்பட்டு மூன்று வாரங்களுக்குப் பிறகு, அவருக்கு எதிரான வழக்கில் மும்பை உயர்நீதிமன்றத்தால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.