கேரள காங்கிரஸ்(எம்) கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான ஜோஸ் கே.மாணி தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
கேரள காங்கிரஸ் (எம்) கட்சியின் தலைவராக இருந்த கே.எம்.மாணி கடந்த ஆண்டு காலமானதைத் தொடா்ந்து, அக்கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு துணைத் தலைவா் ஜோஸ் கே.மாணிக்கும் செயல் தலைவா் பி.ஜெ.ஜோசஃபுக்கும் இடையே போட்டி ஏற்பட்டது.
அதைத் தொடா்ந்து கட்சி இரண்டாகப் பிளவுற்றது. எனினும், இரு தரப்பினரும் கட்சியின் பெயருக்கும், சின்னத்துக்கும் உரிமை கொண்டாடினா். இந்த விவகாரத்தில் கேரள காங்கிரஸ் (எம்) கட்சியின் பெயரும், அதன் சின்னமும் ஜோஸ் கே.மாணி தலைமையிலான அணிக்கே உரியதாகும் என்று இந்திய தோ்தல் ஆணையம் தெரிவித்தது.
இந்த நிலையில் ஜோஸ் கே மாணி தலைமையிலான காங்கிரஸ்(எம்) கட்சி கடந்த அக்டோபர் மாதம் யூடிஎஃப் கூட்டணியில் இருந்து இடது முன்னணி கூட்டணியில் இணைந்தது. அதனைத் தொடர்ந்து தங்களது கூட்டணியில் வென்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்யவில்லை என யூடிஎஃப் கூட்டணி விமர்சித்திருந்தது.
இந்நிலையில் ஜோஸ் கே மாணி தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார். அதற்கான கடிதத்தை துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடுவிடம் அவர் சனிக்கிழமை வழங்கினார்.