உத்தரப்பிரதேச மாநிலத்தில் வருகிற ஜூலை 5 ஆம் தேதி முதல் சினிமா அரங்குகள், வணிக வளாகங்கள், விளையாட்டு மைதானங்கள் திறக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து பெரும்பாலான மாநிலங்கள் படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் சில முக்கிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தியேட்டர்கள், வணிக வளாகங்கள், விளையாட்டு மைதானங்கள், உடற்பயிற்சிக்கூடங்கள் ஆகியவை வருகிற ஜூலை 5 ஆம் தேதி முதல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் மேற்குறிப்பிட்ட இடங்களில் அரசு வழங்கும் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் வழிகாட்டுதல்கள் மீறப்பட்டால், கோவிட் -19 தொற்றுநோய் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சினிமா தியேட்டர்களில் உணவு விநியோகம் இருக்காது, டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே வழங்கப்படும். ஆன்லைன் முன்பதிவு செய்யாதவர்களுக்கு அனுமதி இல்லை, சமூக இடைவெளி பின்பற்றுதல், தியேட்டர்களை அடிக்கடி கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல் உள்ளிட்ட வழிமுறைகள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதுபோல வணிக வளாகங்களுக்கும்,உடற்பயிற்சிக் கூடங்களுக்கும் தனித்தனியே வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.