சமூகநீதித் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் கர்நாடக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதையடுத்து நாளை தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கர்நாடகம் உள்பட 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உத்தரவிட்டுள்ளார்.
இதில், கர்நாடக மாநிலத்தின் ஆளுநராக மத்திய சமூகநீதித் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தாவர்சந்த் கெலாட் பேசியதாவது,
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி என் மீது நம்பிக்கை வைத்து ஆளுநராக நியமித்துள்ளனர். அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வேன். அரசியலமைப்பு வரம்புகளுக்குள் நின்று பிரச்னைகளை தீர்க்க முயற்சிப்பேன்.
மத்திய அமைச்சர், மாநிலங்களவை மற்றும் கட்சிப் பதவிகளை நாளை ராஜிநாமா செய்யவுள்ளேன் எனத் தெரிவித்தார்.
மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்ற தகவல் கடந்த சில வாரங்களாக பரவி வரும் நிலையில், பிரதமா் மோடியை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும், பாஜக பொதுச் செயலா் பி.எல்.சந்தோஷும் ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியுள்ளனா்.
இந்தச் சந்திப்பின்போது மத்திய அமைச்சரவை விரிவாக்கத்துக்கு இறுதிவடிவம் அளிக்கப்பட்டதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.